ஒவ்வொரு ஆண்டும் 3 முறை பிறந்த நாள் கொண்டாடும் அதானி.. என்ன காரணம்?

Siva

திங்கள், 30 ஜூன் 2025 (07:56 IST)
உலகில் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், தொழிலதிபர் கௌதம் அதானி மட்டும் வருடத்திற்கு மூன்று முறை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
1962 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி ஒரு எளிமையான குடும்ப பின்னணியில் பிறந்தவர் கௌதம் அதானி. 16 வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மும்பை வந்தவர். அங்கே வியாபாரத்தில் நுழைந்து, 19 வயதிலேயே தனியாக பிசினஸை ஆரம்பித்தார். இன்று அவர் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய மையமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், தனது உண்மையான பிறந்தநாளான ஜூன் 24 என்பதை தவிர, அவர் மேலும் இரண்டு நாட்களையும் தனது பிறந்தநாளாக கொண்டாடுகிறார்.
 
1998 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, கௌதம் அதானி ஒரு பயங்கரவாத கும்பலால் கடத்தப்பட்டார். அதன் பிறகு காவல்துறையினர் அவரை மீட்ட நிலையில், அந்த ஜனவரி ஒன்றாம் தேதியையும் அவர் பிறந்தநாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறார்.
 
அதேபோல், மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, தாஜ் ஹோட்டலில் அவர் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், அவர் ஒரு குளியல் அறையில் நுழைந்து தனது உயிரை காப்பாற்றிக்கொண்டார். எனவே, மறுவாழ்வு தந்த இந்த நாளையும், அதாவது நவம்பர் 26 ஆம் தேதியையும் அவர் தனது பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்.
 
தனது உண்மையான பிறந்தநாள் மட்டுமின்றி, தான் உயிர் தப்பித்த இரண்டு நாட்களையும் சேர்த்து அவர் பிறந்தநாள் கொண்டாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்