பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

Prasanth Karthick

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (16:12 IST)

கேரளாவில் பொய்யான பாலியல் புகாரால் 7 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த ஆசிரியரிடம் மாணவி வந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மதுரவேலி பகுதியை சேர்ந்தவர் ஜோமோன். இவர் அப்பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு அவரது கல்வி நிலையத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

 

இதனால் அவரது கல்வி நிறுவனமும், மூடப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரே அவரை புறக்கணித்துவிட்டனர். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஜோமோனை யாருமே ஏற்றுக் கொள்ளாத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வறுமையில் வாடியபடி வாழ்க்கையை ஓட்டியுள்ளார். இதற்கிடையே அவர்மேல் குற்றம் சாட்டிய மாணவிக்கு திருமணமாகி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் ஆசிரியர் ஜோமோன் வறுமையில் இருப்பதை பார்த்த அந்த மாணவி தனது தவறை உணர்ந்து ஜோமோனிடம் சென்று கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தாரையும், உறவினர்களையும் அழைத்து தான் சிலரின் தூண்டுதலின் பேரில் பொய் புகார் அளித்துவிட்டதாகவும், ஜோமோன் நல்லவர் என்றும் கூறியுள்ளார். அந்த வழக்கையும் அவர் வாபஸ் பெற்ற நிலையில் ஜோமோன் முழுவதுமாக அந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக வழங்கப்படும் சட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், இதனால் ஆசிரியர் ஜோமோன் இழந்தவை அவருக்கு திரும்ப கிடைக்குமா என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்