டெல்லியின் புதிய முதலமைச்சர் அறிவிப்பு.! வெளியான புதிய தகவல்..!!

Senthil Velan

செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (12:13 IST)
டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அதிஷி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இரு பிரிவுகளில் கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முதலில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், அவர் சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் வெளியே வரமுடியாத சூழல் இருந்தது. அதன்பிறகு சி.பி.ஐ. வழக்கிலும் அவருக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், கோப்புகளில் கையெழுத்து இடக்கூடாது, முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமை செயலகம் ஆகியவற்றுக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு பிறகு கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது தொண்டர்கள் கூட்டத்துக்கு மத்தியில் உரையாற்றிய அர்விந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும்.  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்றது.  கல்வி அமைச்சராக உள்ள 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். பின்னர் அனைத்து எம்எல்ஏக்கள் ஆதரவுடன் டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று  ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்