கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு அவசியம்! – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (15:13 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவும் 3 விதமாக கொரோனா தடுப்பூசிகள் மீதான சோதனையில் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதனால் மாநிலங்கள்தோறும் தடுப்பூசி விநியோகித்தல் மற்றும் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றிற்கு மத்திய அரசு இப்போதே திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் மையங்களில் அதிகபட்சம் 5 பணியாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒருநாளைக்கு அதிகபட்சம் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களை 30 நிமிடங்களுக்கு கண்காணிப்பில் வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முதலாவதாக மருந்தை செலுத்தவும், பின்னர் 60 வயதுக்கு அதிகமான முதியவர்களுக்கு மருந்தை செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் மத்திய அரசின் இனையதளத்தில் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், முன்பதிவு செய்ய ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்