வயநாடு நிலச்சரிவு.. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பு

Siva

செவ்வாய், 30 ஜூலை 2024 (17:36 IST)
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள 3 கிராமங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது என்பதும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் கேரள நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது சில தகவல்களை கூறினார்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

இவ்வாறு வயநாடு நிலச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்