கர்நாடக மாநிலம் கடந்த சில நாட்களாக கடும் மழையால் பலத்த பாதிப்பை சந்தித்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாக்கடைகள் நிரம்பி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.
பெங்களூருவுடன் மைசூரு, ஹாசன், கோலார், தும்கூர் போன்ற மாவட்டங்களிலும் சாலைகள் சேதமடைந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், பெங்களூரு நகர சாலைகள் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதால் ஏற்பட்ட உடல் மற்றும் மனவலி காரணமாக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதுடைய நபர் ஒருவர் பெங்களூரு மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நபர் கூறியதாவது, "நான் ஒரு வரி செலுத்தும் குடிமகன். நகர சாலைகளின் மோசமான நிலை காரணமாக, நான் கடுமையான கழுத்து மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டேன். எலும்பியல் மருத்துவரிடம் ஐந்து முறை சென்றேன். அவசர சிகிச்சையும் நான்கு முறை பெற்றேன். இதற்கு மாநகராட்சி பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.