அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

Mahendran

திங்கள், 19 மே 2025 (11:50 IST)
பெங்களூருவில் உள்ள பிரபலமான "பிரஸ்டீஜ் சன் பார்க்" குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது காலணி அலமாரியை வழித்தடத்தில் வைத்ததற்காகவே முன்கூட்டியே அபராதம் கட்டியுள்ளார்.
 
இங்கு உள்ள குடியிருப்பு சங்கம், பொதுப் பகுதிகளில் தனிப்பட்ட பொருட்கள் வைக்கக்கூடாது என விதிமுறைகள் வகுத்துள்ளது. இந்த நெறிமுறையை மீறியதற்காக, ஒரு இளைஞரிடம் தினசரி ரூ.100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது கடந்த 8 மாதங்களில் ரூ.24,000 ஆகக் கூடியுள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகவும், பெரும்பாலானவர்கள் பொதுப் பகுதியில் வைத்திருந்த பொருட்களை அகற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த இளைஞர் மட்டும் காலணி அலமாரியை அகற்ற மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி பல மாதங்களுக்கு அபராத தொகையை அவர் முன்கூட்டியே கட்டிவிட்டதாகவும் தெரிகிறது.
 
இதனிடையே சங்கம் தனது நடவடிக்கையை மேலும் கடுமையாக்கி, இனிமேல் தினமும் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
 
ஒரு காலணி அலமாரி இவ்வளவு பெரிய விவகாரமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் குடியிருப்புகளின் ஒழுங்குமுறை மற்றும் பொதுநலக் கோட்பாடுகள் ஒரு பக்கம், தனிநபரின் சுதந்திரமும் இன்னொரு பக்கம்  இவை இடையே நடைபெறும் மோதலுக்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டாக இது உள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்