ரூபாய் நோட்டு விவகாரம் ; இரவு பகலாக வேலை செய்த வங்கி மேனேஜர் மாரடைப்பில் மரணம்

வெள்ளி, 18 நவம்பர் 2016 (12:58 IST)
புதிய ரூபாய் நோட்டுகளை, மக்களுக்கு வழங்கும் பணி காரணமாக, இரவு பகலாக வங்கியில் தங்கியிருந்து வேலை செய்த வங்கி மேலாளர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


 

 
மக்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளை பெற மக்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர். இதனால், வங்கி ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. 
 
மேலும், வழக்கமாக வங்கிகளில் நடைபெறும், பண, காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் மற்ற வேலைகள் அப்படியே தேங்கிக் கிடக்கிறது. இதனால் எல்லாவற்றையும் ஒரு சேர முடிக்க வேண்டிய நிலைக்கு வங்கி ஊழியர்கள் தள்ளப்பட்டுனர். எனவே, காலை நேரங்களில் விரைவாக வங்கி திறக்கப்படுகிறது. அதேபோல், இரவு நேரங்களிலும் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வங்கி ஊழியர்களின் உடல் மற்றும் மன நிலையை பாதிப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், கடுமையான வேலை பழு காரணமாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 
ஹரியானா மாநிலத்தின் ரோக்டாக்கில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்குமார் (56). இவர் கடந்த 3 நாட்களாக வங்கியிலேயே தங்கி, இரவும் பகலும் இடைவிடாமல் பணி செய்து வந்தார். 
 
இந்நிலையில், கடந்த புதன் கிழமை காலை பணிக்கு வந்த வங்கி பாதுகாவலர்கள், அவரது அறையை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 
 
இதையடுத்து அங்கு வந்த போலீசார், அவரது அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது, இருக்கையில் அமர்ந்தபடியே அவர் மரணமடைந்தது தெரியவந்தது. வேலை பளு காரணமாக, அவர் மாரடைப்பில் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 
 
இந்த சம்பவம், அந்த வங்கி ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்