ஆப்பிள் ஐஃபோன் 1000 ரூபாய்? ப்ளிப்கார்ட்டில் நடந்த பலே மோசடி? - ட்ரெண்டாகும் #FlipkartScam

Prasanth Karthick

புதன், 18 செப்டம்பர் 2024 (11:48 IST)

பிரபலமான ஆன்லைன் பொருட்கள் விற்பனை தளமான ப்ளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலைக்கு தருவதாக ஏமாற்றியதாக நெட்டிசன்கள் ஹேஷ்டேகுகளை ஷேர் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியாவில் பிரபலமான இ-கார்ட் தளங்களில் ஒன்றாக ஃப்ளிப்கார்ட் இருந்து வருகிறது. இதில் ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப் தொடங்கி சின்ன சின்ன பொருட்கள் வரை ஏராளமான பொருட்கள் பல்வேறு விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்படுகின்றன. அதேசமயம் போலியான பொருட்கள் விற்பனை இதில் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் புதிய குற்றச்சாட்டு ஒன்றை வாடிக்கையாளர்கள் முன் வைத்துள்ளனர்.

 

இதுகுறித்த பல ஸ்க்ரீன்ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன. அதன்படி Flipkart அறிமுகப்படுத்திய FireDrops Reward Points என்ற சலுகையில் பங்கேற்ற சில வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் பொருட்கள் மீது 99% விலை சலுகையை பெற்றுள்ளனர். அதை பயன்படுத்தி ஆப்பிள் ஐஃபோன் உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர்.

 

அதன் விலை வெறும் ஆயிரங்களில் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் வேகவேகமாக ஆர்டர் செய்த நிலையில், சில மணி நேரத்திலேயே ஆர்டர்கள் விற்பனையாளரால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது, விற்பனையாளர் பொருளின் விலையை தவறுதலாக குறைவான இலக்கத்தில் பதிவிட்டு விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

ஆனால் வாடிக்கையாளர் ஒருவர் தான் FireDrops Reward Points பயன்படுத்தியே பொருளை 99 சதவீத கழிவில் ஆர்டர் செய்ததாகவும் அதை எப்படி கேன்சல் செய்ய முடியும் என்றும் ஃப்ளிப்கார்ட்டை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #FlipkartScam என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பது குறித்து ஃப்ளிப்கார்ட் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்