வேறு பெண்ணுடன் சென்ற கணவர்! டிராபிக் கேமராவால் பிரிந்த குடும்பம்!

புதன், 10 மே 2023 (16:36 IST)
கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் வேறு பெண்ணுடன் கணவன் சென்றதை கண்டுபிடித்த மனைவி அவரை பிரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் போக்குவரத்து விதிகளை மக்கள் சரியாக பின்பற்ற பல தொழில்நுட்ப அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறாக கேரளாவில் பல இடங்களில் சிக்னல்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன.

இந்த கேமராக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வண்டி எண்ணை குறித்து அதன் மூலம் வண்டி உரிமையாளருக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இடுக்கி பகுதியை சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் போனபோது அதை செயற்கை நுண்ணறிவு கேமரா படம் பிடித்து அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தகவல் பிடிக்கப்பட்ட போட்டோவுடன் அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த போட்டோவில் அந்த நபரின் இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் கூட அமர்ந்திருப்பதை அவரது மனைவி பார்த்திருக்கிறார். அது யார் என அவர் கேட்க, வழியில் அந்த பெண் லிஃப்ட் கேட்டதாகவும், தான் ஏற்றி சென்றதாகவும் கணவர் கூறியிருக்கிறார்.

ஆனால் அவரது மனைவி அதை நம்பவில்லை. மேலும் அவர் தனது கணவர் குறித்து காவல்நிலையத்தில் தன்னையும், தன் குழந்தையையும் தாக்கியதாக புகார் செய்த நிலையில் 3 வழக்குகளில் கணவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை சரிபார்க்க அமைக்கப்பட்ட தானியங்கி கேமராவால் ஒரு குடும்பம் பிரிந்த சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்