ஜூலை 15 முதல் தந்தி சேவை நிரந்தரமாக நிறுத்தம்

வியாழன், 13 ஜூன் 2013 (11:54 IST)
FILE
தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் பின்னடைவு அடைந்துள்ள 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி சேவையை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்திவிட பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

160 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி சேவையை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முதல் நிறுத்துமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியதாக தெரியவதுள்ளது.

தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் கடிதம் போல இல்லாமல் அவசர செய்திகள் அனுப்ப மக்கள் தந்தி சேவையை பயன்படுத்தி வந்தனர். அவசர செய்திகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்க தந்தி சேவை ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது எனக் கூறலாம்.

ஆனால் தற்போது நிலவும் சூழலில் இன்டர்நெட், மின் அஞ்சல், எஸ்.எம்.எஸ், செல்போன் என அனைத்தும் மக்களின் உபயோகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கடித போக்குவரத்தும், தந்தி சேவையின் பயன்பாடும் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 1853 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட தந்தி சேவைக்கு இன்று வேலையில்லாமல் போய்விட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மக்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதும், தகவல் தெரிவிப்பதும் எளிதாகிவிட்டது.

இதனால் தந்தி சேவையின் பயன்பாடு குறைந்துவிட்டதால் அதன் மூலம் லாபம் கிடைக்கவில்லை. இதனால் இந்த சேவையை அளித்து வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இந்த தந்தி சேவை வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் வரலாறாக மாறப்போவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்