இது நம்ம ஆளு: சிம்பு, நயன்தாரா கூட்டணி வசூலை அள்ளுமா?

வியாழன், 26 மே 2016 (17:28 IST)
சிம்பு, நயன்தாரா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பில் நாளை வெளியாகிறது இது நம்ம ஆளு திரைப்படம்.


 
 
மூன்று வருடமாக இன்று நாளை என இழுத்தடித்து வந்த இந்த திரைப்படம் ஒரு வழியாக நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள். பிரிந்து விட்ட பின்னர் படத்திற்காக இருவரும் சேர்ந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. போதா குறைக்கு மூன்று வருட போராட்டத்திற்கு பின்னர் படம் வெளிவருவதால் சிம்பு ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
சிம்பு, நயன்தாரா இருவருமே அதிகமாக கிசுகிசுக்கப்படும் பிரபலங்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. சிம்புவுக்கு தற்போது திரைப்படங்கள் தோல்வி முகமாக இருந்தாலும், தொடர் வெற்றிகளை குவித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று சிம்புக்கு புதிய சினிமா பாதையை உருவாக்கும் என கூறுகிறார்கள்.
 
காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.
 
மேலும், படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்" என்றார் பாண்டிராஜ்.
 
இயக்குனர் பாண்டிராஜ் முன்னாள் காதலர்களை வைத்து இயக்கி இருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. படம் எப்படியோ, சிம்பு, நயன்தாரா இருவரையும் திரையில் சேர்ந்து பார்க்கவே கூட்டம் அள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்