தேர்தல் அறிக்கை பரிந்துரை பகிருங்கள்.! மக்களிடம் கருத்து கேட்கிறது திமுக.!!

Senthil Velan

சனி, 3 பிப்ரவரி 2024 (13:40 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதற்காக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது என்றும் தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து,  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது [email protected]இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இதன் மூலம் உங்களின் தேவைகளை புரிந்து கொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதே போல் தொலைபேசி மூலமும், சமூக ஊடகங்களிலும், டவுன் ஹால் கூட்டங்களிலும், ஆன்லைன் படிவங்கள் மூலமாகவும் தேர்தல் அறிக்கை பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று திமுக தெரிவித்துள்ளது.

ALSO READ: தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி.! பிப் 12-ல் செயற்குழு - ஜி கே வாசன்..!!
 
தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப். 25 ஆம் தேதி வரை உள்ளது.  அதன் பிறகு,  ஒரு விரிவான அறிக்கையை உருவாக்க, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்