சி.ஏ.ஏ சட்டத்தால் எந்த மதத்தின் உரிமைகளும் பறிக்கப்படாது..! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

Senthil Velan

திங்கள், 8 ஏப்ரல் 2024 (14:08 IST)
நாட்டிலேயே நம்பகத்தன்மை கொண்ட கட்சி பாஜக தான் என்றும் எங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்காது என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை தற்போது சூடு பிடித்துள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். 
 
இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்ற அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதையடுத்து நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 
 
வேட்பாளருடன் வாகனத்தில் சென்ற ராஜ்நாத் சிங்,  சாலையோரம் திரண்டு இருந்த மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நாட்டிலேயே நம்பகத்தன்மை கொண்ட கட்சி பாஜக தான் என்றும் எங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்காது என்றும் தெரிவித்தார். குடிசையில் இருந்த ராமருக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி கோயில் கட்டி உள்ளதாகவும் அவர் கூறினார்.

ALSO READ: தேர்தல் முடிந்ததும் பணம் கொண்டு செல்லலாமா..? அதிரடி ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்
 
காங்கிரஸ் திமுக பிரச்சாரம் செய்வதுபோல் சி.ஏ.ஏ சட்டத்தால் எந்த மதத்தின் உரிமைகளும் பறிக்கப்படாது என்று ராஜ்நாசிங் தெரிவித்தார். முன்னதாக அவரது வருகைய ஒட்டி வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நாமக்கல்லில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்