தேர்தல் முடிந்த உடனே ‘பேக்கப்’..! ராதிகாவை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்..!

Senthil Velan

புதன், 10 ஏப்ரல் 2024 (21:15 IST)
தேர்தல் முடிந்ததும் நடிகை ராதிகா விருதுநகரில் இருந்து ‘பேக்கப்’ செய்து சென்னைக்குச் சென்று விடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது பேசிய அவர், தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார் என்றும் அவரை எதிர்த்து போட்டியிட ஒரு அக்கா சென்னையில் இருந்து வந்திருக்கிறார் என்றும் கூறினார். 
 
அவர் விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்துக்காக 15 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்திருக்கிறார் என தெரிவித்த உதயகுமார், அவருக்கு வசனம் எழுதிக் கொடுப்பார்கள், அதை அப்படியே நடித்துக் காட்டுவார், பேசிக் காட்டுவார், தேர்தல் முடிந்த உடனே ‘பேக்கப்’ செய்து சென்னைக்கு கிளம்பிச் சென்று விடுவார் என்று விமர்சித்தார்
 
அதன் பின்பு நீங்கள் சென்னைக்குச் சென்று அவரது வீட்டுக் கதவை தட்டினாலும் திறக்க மாட்டார் ஆனால் ஆனால், விஜய பிரபாகரனின் இதய கதவு எப்போதும் திறந்து இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்