அள்ளிய ஜியோ: ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம்!

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (16:00 IST)
5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. அந்த வகையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

அதன்படி 5 ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. ஜியோ, ஏர்டெல், வேடோஃபோன் - ஐடியாவுடன் அதானி நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்றன. அலைக்கற்றையை கைப்பற்றும் முனைப்பில் முன்னணி நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன.

இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதில், 4 நிறுவனங்களும் ரூ.21,800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன. ரிலையன்ஸ் ரூ.16,000 கோடியும், ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ரூ.2,200 கோடியும், அதானி டேட்டா நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 7 சுற்றுகளாக நடந்த ஏலம் முடிந்த நிலையில் ஜியோ அதிகளவில் 5ஜி அலைக்கற்றையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதானி குழுமம் குறைந்த அளவில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்