காரைக்கால் சித்தி காளியம்மன் கோவில்: அருள்புரியும் அன்னை காளி!

Mahendran

வியாழன், 26 ஜூன் 2025 (18:44 IST)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், பச்சூர் கிராமத்தில், நூலாற்றங்கரையின் மடியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது சித்தி காளியம்மன் கோவில். இந்த ஆலயம், நோய்களில் இருந்தும், தீய சக்திகளில் இருந்தும் காத்து, குழந்தை பாக்கியம் மற்றும் திருமண வரம் அருளும் சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது.
 
ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக சித்தி காளியம்மன் அருள்பாலிக்கிறார். விநாயகர், சிவன், பெரியாட்சி, காத்தவராயன், பொம்மி, ஆரியமாலா போன்ற பரிவார மூர்த்திகளும் இங்கு காட்சி தருகின்றனர். வெளிப் பிரகாரத்தில் பிள்ளையார், ராகு, கேது, ஐந்து தலை நாகம் ஆகியவை அமைந்துள்ளன. அரச மரம், வேம்பு, வன்னி ஆகியவை இத்தலத்தின் தல விருட்சங்கள்.
 
ஒவ்வொரு பௌர்ணமியிலும் பூஜைகளும், அன்னதானமும் நடைபெறுகின்றன. ஆடி, தை மாதங்களில் பெண்கள் விளக்கு பூஜை செய்கின்றனர். ஆடிப்பூரம், கார்த்திகை தீபத் திருவிழா, கன்னிப் பொங்கல், மார்கழி மாத அதிகாலை பூஜை, ஆடி மாதக் கஞ்சி ஊற்றுதல், வைகாசி மாத அசுர சம்ஹாரப் பெருவிழா எனப் பல விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பூச்சொரிதல், சந்தனக் காப்பு, மாவிளக்கு பூஜை, பாலாபிஷேகம், திருவீதி உலா போன்றவையும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
 
ராகு, கேது பகவான் அரச மரம், வேப்ப மரத்துடன் அருள்பாலிப்பதால், திருமண மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இங்குள்ள மரத்தைச் சுற்றி வந்து வழிபடுகின்றனர். நோய் நீங்க வேண்டுவோர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கி அன்னதானம் பெற்றுச் செல்கின்றனர். இக்கோவில் காரைக்கால் - திருநள்ளார் மெயின்ரோட்டில் உள்ள பச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்