ஒருவர் நமக்குத் துன்பம் விளைவிக்கும்போது, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு, நம்முடைய முன்வினைப் பயனும் காரணமாக இருக்கலாம். எனவே, நமக்கு வந்த துன்பத்திலிருந்து மீள முயற்சி செய்ய வேண்டுமே தவிர, நமக்கு துன்பம் விளைவித்தவர்கள் மீது கோபம் கொண்டு பழிவாங்க நினைக்கக் கூடாது.
ராமாயணத்தில், அனுமனிடம் சீதா தேவி கூறியது இதைத்தான். ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு, அசோகவனத்தில் அரக்கிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த சீதையை, அவர்கள் தினமும் துன்புறுத்தினர். ஆனால், சீதை அவர்கள் மீது கோபப்படவில்லை. தனக்கு நேரும் துன்பம் எல்லாம், தன் முன்வினைப் பயனே என்று உறுதியாக நம்பினார்.
ராவணன் கொல்லப்பட்ட செய்தியை அனுமன் சீதையிடம் சொன்னபோது, மகிழ்ச்சியுற்ற சீதை அனுமனிடம் வரம் கேட்க சொன்னார். அதற்கு அனுமன், "உங்களைத் துன்புறுத்திய இந்த அரக்கிகளை தீயிட்டுக் கொளுத்த அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.
ஆனால், சீதை மறுத்துவிட்டார். "இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தினாலும், அவர்களை தண்டிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், பொன்மானுக்கு ஆசைப்பட்டு, கணவரை அனுப்பியதும், லட்சுமணனை கடுமையாக பேசியதுமான என் தவறுகளால்தான் இந்த துன்பங்கள் எனக்கு வந்தன. இந்த அரக்கிகள் அதற்கு ஒரு கருவி மட்டுமே. எனவே, நீ அவர்களை ஒன்றும் செய்யாதே" என்றார்.