IAS தேர்வுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் பயிற்சி

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (17:36 IST)
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள IAS தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கா.அ.மணிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், IAS தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பவர்களின் வசதிக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறையின் சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த வகுப்புகள் சனி, ஞாயிறு மற்றும் இதர அரசு விடுமுறை நாள்களில் நடைபெறும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் அனுபவமிக்க பேராசிரியர்களும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும் பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இளைஞர் நலத்துறை இயக்குனரிடம் வரும் 20ஆம் தேதிக்குள் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக தொலைபேசி எண் 0462-2333741, 2338721 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்