ரா‌‌க்கிங் செய்தால் உடனடி ‌நீ‌‌க்க‌ம்: யு.ஜி.சி எ‌ச்ச‌ரி‌க்கை

சனி, 8 ஆகஸ்ட் 2009 (12:03 IST)
உயர்கல்வி நிறுவனங்களில் ரா‌க்கிங் கொடுமையை முற்றிலும் ஒழிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) கடும் விதிகளை வகுத்துள்ளது. அதனை நாட்டில் உள்ள அனைத்து பல்கலை‌க்கழக‌ங்களுக்கும் யு.ஜி.சி அனுப்பி வைத்துள்ளது.

இதுதொட‌ர்பாக யு.ஜி.சி அனு‌ப்‌பியு‌ள்ள சு‌ற்ற‌‌றி‌க்கையில், ரா‌க்கிங் குறித்த தகவல்களை யாரிடம் சொல்ல வேண்டும் என்பதை கல்வி நிறுவனங்கள் தெளிவாக வெளியிட வேண்டும். தகவல் கொடுப்பவர்களை பாராட்ட வேண்டும். ரா‌க்கிங் நடக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோரும் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கல்வி நிறுவன தலைவர், சிவில் மற்றும் காவ‌ல்துறை நிர்வாக பிரதிநிதிகள், உள்ளூர் ஊடகம், அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகளை தேர்வு செய்து ரா‌க்கிங் தடுப்பு குழு அமைக்க வேண்டும். அதில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் இடம்பெறலாம்.

கல்லூரிகள் முதல் 3 மாதத்தில் தாங்கள் மேற்கொண்ட ரா‌க்கிங் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பல்கலை‌க்கழக‌துணைவேந்தர்களுக்கு வாரம் ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையை மாநில கண்காணிப்புக் குழுவிடம் துணைவேந்தர் கொடுக்க வேண்டும்.

ரா‌‌க்கிங் தடுப்பு குழுவினர், மாநில அளவிலான குழுவினரின் ஆய்வுக்கு பிறகு குறிப்பிட்ட மாணவர் ரா‌க்கிங்கில் ஈடுபட்டது உறுதியானால், அந்த மாணவரை வகுப்பில் பங்கேற்பதில் இருந்து நிறுத்தி வைக்கலாம். அவருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை திரும்பப் பெறலாம். தேர்வு எழுத முடியாமல் செய்வது, தேர்வு முடிவை நிறுத்தி வைப்பது ஆகிய நடவடிக்கைகளையும் எடுக்கலாம். இறுதியாக அவரது கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யலாம்.

ஒன்று முதல் 4 பருவத்தேர்வுகள் வரை அந்த மாணவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். அந்த மாணவரை அந்த கல்வி நிறுவனத்தில் இருந்து ‌நீ‌க்க‌ம் செய்வதுடன், வேறு கல்லூரியில் சேர முடியாமல் செய்வது உள்ளிட்ட தண்டனைகளை அளிக்க வேண்டும்.

இந்த விதிகளை கடைபிடிக்காத கல்வி நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ராகிங் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கல்லூரியின் இணைப்பு மற்றும் அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் ரத்து செய்ய வேண்டும். அந்த கல்லூரியில் மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுவதை தடை செய்ய வேண்டும்.

யு.ஜி.சி.யிடம் கல்வி நிறுவனங்கள் பெறும் நிதியுதவிகள் நிறுத்தி வைக்கப்படும். அந்த கல்லூரிகள் தகுதி இல்லாதவை என்று அறிவிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்