பத்தாம் வகுப்பு தேறியவருக்கு 6 ஆண்டில் பொறியியல் பட்டம்: ‌IGNOU புதிய முயற்சி

புதன், 19 ஆகஸ்ட் 2009 (13:10 IST)
ஐடிஐ, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 (Vocational) மற்றும் அறிவியில் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் மட்டுமின்றி இக்கல்வித் தகுதியுடன் பணியில் இருக்கும் அனைவருக்கும் பொறியியல் பட்டம் வழங்கும் நோக்கத்துடன் புதிய திட்டத்தை வரும் ஜனவரி 2010 முதல் இக்னோ துவங்குகிறது.

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகமான இக்னோ (‌IGNOU) இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னையில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கல்வி அறக்கட்டளையுடன் (SAPET) இணைந்து நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப்படிப்பினை (B.Tech) முழு நேரப் படிப்பாக வழங்குகிறது.

பல்முறை நிலைகளில் நுழைவு மற்றும் பல்முனை நிலைகளில் தேர்வ
நடைபெறுகிறது. இரண்டாம் ஆண்டு முடிவில் சான்றிதழும், மூன்றாம் ஆண்டு முடிவில் பட்டயம் மற்றும் 6ஆம் ஆண்டு முடிவில் பொறியியல் இளங்கலைப் பட்டமும
வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை மற்றும் பருவத்தேர்வு நடைபெறும்.

IGNOU- SAPET அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரலாம். ஒரு பாடக் கிளையி‌ல் இரு‌ந்து மற்றொரு கிளைக்கு மாறும் வசதியும் உள்ளது. இரண்டு, மூன்று மற்றும் 6 ஆண்டுகள் என மூன்று கல்வி நிலைகள் இப்பயிற்சியில் உள்ளன.

பணியில் இருந்து கொண்டே கல்வியைத் தொடரும் வசதியை வழங்கியுள்ள இக்னோ, இப்படிப்பாக வயது வரம்பு எதையும் நிர்ணயிக்கவில்லை.

குறைந்த கல்விக் கட்டணத்தில் கிராமப்புற மாணவர்களும் பொறியியல் பட்டம
பெறும் வாய்ப்பு, 3 கல்வி நிலைகளில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி எப்பொழுது வேண்டுமானாலும் தொடரும் வாய்ப்பு என பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.

ஜனவரி 2010இல் துவங்க உள்ள இந்த பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, 2008-09ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்2 முடித்து (இயற்பியல், வேதியியல், கணிதவியல்) நல்ல பொறியிய‌ல் கல்லூரிகளில் நுழைய முடியாமல் கனவுகளுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி நல்ல மதிப்பெண்கள் மற்றும் பொருளாதார நிலையினால் பொறியிய‌ல் கல்லூரியில் சேர முடியாதவர்களுக்கும் இது ஒரு பயனுள்ள வாய்ப்பாகும்.

மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறு‌ம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் முதலாம் ஆண்டில் சேரலாம்.

ஐ.டி.ஐ மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் நுழைவுத் தேர்வின்றி நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம். 12ஆம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், கணிதவியல்) பயின்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும், நுழைவுத் தேர்வின் மூலம் 3ஆம் ஆண்டிலும் சேரலாம்.

பட்டயப் படிப்பு படித்தவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் நேரடியாக 4ஆம் ஆண்டில் சேரலாம். இவர்களுக்கான சிறப்பம்சமாக அவர்களின் பாடக்கிளையை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.

இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி, அறிவியில், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் கார்ப்பரேட் செகரெட்டரிஷிப் போன்ற கிளைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வின்றி 4ஆம் ஆண்டில் சேரலாம்.

மேலும் விவரங்களுக்கு 19, 2வது தளம், ஈ.கே.குரு தெரு, பெரியமேடு, சென்னை என்ற முகவரி அல்லது 044 -32552475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்