சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அந்த சட்ட மசோதாவில், ''தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குப்படுத்த, விரிவான ஒரு சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள படிப்புகள் மற்றும் படிப்பு பிரிவுகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கட்டணத்தை அரசாங்கமே நிர்ணயம் செய்யும்.
தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கட்டணம் குறித்து தீர்மானிக்க ஒரு குழு அமைக்கப்படும். அக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி, பள்ளி கல்வித்துறை இயக்குனர், மெட்ரிகுலேசன் இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், பொதுப் பணித்துறை இணை தலைமை பொறியாளர் (கட்டடங்கள்). பள்ளி கல்வித்துறை கூடுதல் செயலர் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு இதனை மீறி யாராவது செயல்பட்டால் அதன் நிறுவனருக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்த கூடுதல் கட்டணம் அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.