ஆகஸ்ட் 11இல் பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வு

புதன், 29 ஜூலை 2009 (12:47 IST)
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் வெற்றி பெற்று மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான சிறப்பு துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கான சிறப்பு துணை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான பொறியியல் விண்ணப்பங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு மையத்தில் இன்று (ஜூலை 29) முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.500 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250). ‘இயக்குநர், மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம்-சென்னை’ என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு துணை கலந்தாய்வுக்கு தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்ன’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்