இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (09:51 IST)
இந்த ஆண்டு ஐபில் தொடரின் மிகவும் பரபரப்பான போட்டி நேற்று நடந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தனைக்கும் நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 112 ரன்கள்தான். நேற்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

112 ரன்கள் என்ற எளிய இலக்கோடு ஆட வந்த கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து மோசமாக விளையாடுவதில் பஞ்சாப் அணிக்கு ஈடு கொடுத்தது. ஆனால் கொல்கத்தா அணி அதிரடி பேட்ஸ்மேன் ரஸ்ஸல் களத்தில் இருந்ததால் எப்படியும் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் கடைசி ஆளாக விக்கெட்டை இழக்க கொல்கத்தா அணி 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.

இந்த நம்ப முடியாத வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணிக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் “என்னால் இப்போது பேசக் கூட முடியவில்லை. இந்த வெற்றியை எங்களால் நம்பக் கூட முடியவில்லை. சஹால் சிறப்பாக பந்துவீசி வெற்றியை எங்கள் பக்கம் இழுத்து வந்தார். இந்த வெற்றியால் துள்ளிக் குதிக்காமல் அடக்கமாக இருக்க முயற்சி செய்வோம். இந்த வெற்றி எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.” எனக் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்