பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் மழை பெய்ததால் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பல ஆண்டுகளாக காப்பாற்றி வந்த முக்கியமான சாதனையை உடைத்துள்ளது பஞ்சாப் அணி. மும்பை இந்தியன்ஸ் அணி இதற்கு முன்னர் 18 முறை 200 ரன்களுக்கு மேல் சேர்த்து, அதில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருந்தது. நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் & கோ அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.