கடைசி ஓவரில் நம்பிக்கை அளித்து ஏமாற்றிய ஹர்திக் பாண்ட்யா… பரபரப்பான போட்டியில் குஜராத் வெற்றி!

vinoth

திங்கள், 25 மார்ச் 2024 (07:32 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை சார்பாக சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது.

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ, ரன்ரேட் 10க்கும் மேல் சென்றது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட் செய்தார். 20 ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸாகவும், பவுண்டரியாகவும் அடிக்க மும்பை அணி ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்