ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இம்மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்தாலும் அவரின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு சுப்மன் கில் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாடுவது உறுதியில்லை என்பதால் புதிய அணியை உருவாக்கும் விதமாக கேப்டன்சி மாற்றப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஆஸ்திரேலியா தொடருக்காகத் தற்போது புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் இருந்து அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருகின்றனர். இது ஆஸி அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் பேட் கம்மின்ஸ் முதுகுவலி காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார். அதே போல தற்போது கேமரூன் க்ரீன் மற்றும் ஜோஷ் இங்லிஷ் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். அதையடுத்து ஆடம் ஸாம்பா முதல் போட்டிக்கு விளையாட முடியாத சூழலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.