நான் தோத்துட்டா என் குடும்பத்தை இழுத்து கேவலமா திட்டுவாங்க! – ஆர்சிபி ரசிகர்கள் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்!

Prasanth Karthick

புதன், 10 ஏப்ரல் 2024 (10:49 IST)
ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்தி, ஆர்சிபி ரசிகர்கள் குறித்து சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் பேசியது வைரலாகியுள்ளது.



நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் தமிழ்நாட்டு வீரர் தினேஷ் கார்த்திக். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக சிறந்த ஃபினிஷராக விளையாடி உலகக்கோப்பை டி20 போட்டியிலும் இடம்பெற்றார். இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சக தமிழக கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பக்கம் ஐபிஎல் விளையாடிக் கொண்டே மறுபுறம் தனது யூட்யூப் சேனலில் ஐபிஎல் போட்டிகள் குறித்த ரிவ்யூக்களையும் பேசி வருகிறார். சமீபத்தில் அஸ்வினின் அந்த ரிவ்யூ வீடியோவில் தினேஷ் கார்த்திக்கும் கலந்து கொண்டார். அப்போது ஆர்சிபி ரசிகர்கள் குறித்தும் அவர் பேசினார்.

அதில் அவர் “ஆர்சிபி ரசிகர்கள் போன்ற நேர்மையான ரசிகர்களை பார்க்கவே முடியாது. 16 ஆண்டுகளில் அவர்கள் அளிக்காத ஆதரவே கிடையாது. அதனால்தான் உலகம் முழுவதும் பல இடங்களில் ஆர்சிபி அணியை தெரிகிறது. ஆனால் ஆர்சிபி ரசிகர்களிடம் நல்லதும் கெட்டதும் ரெண்டுமே உள்ளது. நல்லது என்னவென்றால் அணி வீரர்களை வெளியே விட்டுத்தரவே மாட்டார்கள். தினேஷ் கார்த்திக் நன்றாக விளையாடவில்லை என்று யாராவது சொன்னால், அவர் என்னென்ன சாதனை செய்திருக்கிறார் தெரியுமா என்று எடுத்துக்காட்டி வாக்குவாதம் செய்வார்கள்.

அதேசமயம், உள்ளுக்குள் நம்மை கழுவி ஊற்றி விடுவார்கள். என்னுடைய இன்பாக்ஸில் வந்து கேவலமாக திட்டுவார்கள். என்னை மட்டுமல்லாமல் என் குடும்பத்தை, எனக்கு தெரிந்தவர்களை எல்லாரையும் இழுத்து திட்டுவார்கள்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்