ஒரே மாதத்தில் இப்படி ஒரு மாற்றமா?... ட்ரோல் செய்த மும்பை ரசிகர்களே ஹர்திக்கை கொண்டாடிய மொமண்ட்!

vinoth

வெள்ளி, 5 ஜூலை 2024 (07:27 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இதனால் 140 கோடி இந்திய மக்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக்கியதும் ரசிகர்களுக்கு அவர் மேல் கோபம் வர காரணமாக அமைந்தது.

அதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. ஆனால் உலகக் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே அவரின் ஆட்டம் சீராகி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பினார். இறுதிப் போட்டியில் அவர் பவுலிங்கில் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் அவர் சுமார் 200 ரன்களும் 15 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவர் ஐசிசி தரவரிசைகளுக்கான பட்டியலில் ஆல்ரவுண்டர்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உலகக் கோப்பை வென்று வந்த இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா ஹர்திக் பாண்ட்யா எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்பது குறித்து பேசினார். அப்போது அந்த மைதானத்தில் குழுமி இருந்த ரசிகர் பட்டாளம் “ஹர்த்திக், ஹர்திக்” என தொடர் முழக்கம் எழுப்பினர். கூட்டத்தினரின் பாராட்டுகளை தலைசாய்த்து பெற்றுக்கொண்டார் ஹர்திக் பாண்ட்யா. இதே வான்கடே மைதான ரசிகர் கூட்டம்தான் அவர் மும்பை கேப்டனாக டாஸ் போட வரும்போது அவரை கூச்சலிட்டு தர்மசங்கடமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்