“பாகிஸ்தானுக்காக நேரத்தை வீணடிக்காதீர்கள்… இந்திய அணிக்கு வாருங்கள்”- கேரி கிறிஸ்டனை அழைக்கும் முன்னாள் வீரர்!

vinoth

செவ்வாய், 18 ஜூன் 2024 (07:18 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. அந்த அணி கத்துக்குட்டி அணிகளிடம் மோதிய போது மிக எளிதாக வெற்றி பெறவேண்டிய போட்டிகளை போராடிதான் வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. அணிக்குள் வீரர்கள் பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் தலைமையில் குழுவாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் அந்த அணியின் டி 20 கிரிக்கெட்டுக்கு மட்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணி முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் அணியைப் பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவர் பேசும்போது “பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமையே இல்லை. இது ஒரு அணியே கிடையாது. வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. அனைவரும் தனித்தனியாக உள்ளனர். எத்தனையோ அணிகளோடு பணியாற்றியுள்ளேன். ஆனால் இதுபோல ஒரு அணியை நான் பார்த்ததில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேரி கிரிஸ்டனிடம் “பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள். இந்தியாவுக்கு திரும்புங்கள். கிரிஸ்டன் அரிதினும் அரிதான் பயிற்சியாளர். அவர் எங்களின் வின்னிங் கோச். உலகக் கோப்பை அணியில் இருந்த அத்தனை வீரர்களுக்கும் அவர் சிறந்த நண்பர்.” என அழைப்பு விடுத்துள்ளார். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் விரைவில் பதிவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஹர்பஜனின் இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்