இப்ப அக்னி நட்சத்திரமா தகிக்கும் கம்பீரும், கோலியும் ஒரு காலத்துல எப்படி இருந்தாங்க தெரியுமா?- ஒரு குட்டி ஸ்டோரி!

புதன், 3 மே 2023 (08:05 IST)
நேற்று முன் தினம் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர்.  பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.

இதுபோல 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கம்பீரும் கோலியும் மைதானத்திலேயே மோதிக் கொண்டனர். அப்போதில் இருந்து இருவருக்கும் இடைடே சுமூகமான உறவில்லை. கோலியின் பேட்டிங்கை கம்பீர் கடுமையான விமர்சனங்கள் செய்து வருவதாக இருந்தார்.

ஆனால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கோலிக்கு, ஆதரவாக கம்பீர் பல நேரங்களில் இருந்துள்ளார். இருவரும் இணைந்து பல வெற்றி பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளனர். அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.

2009 ஆம் ஆண்டு இந்திய அணி கம்பீர் தலைமையில் இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடிய போது 315 ரன்களை சேஸ் செய்தது. அந்த போட்டியில் கம்பீர், கோலி இருவரும் சதமடித்து வெற்றிக் காரணிகளாக அமைந்தனர். அந்த போட்டியில் அடித்ததுதான் கோலியின் முதல் சர்வதேச சதமாகும். அந்த போட்டியில் கம்பீர் 150 ரன்கள் அடித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இளம் வீரரான கோலியை ஊக்குவிக்கும் விதமாக அந்த விருதை அவர் கோலியை அழைத்து அவருடன் பகிர்ந்துகொண்டார் என்பது தற்போதைய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அறியாதது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்