காலிஸ்தான் விவகாரத்தில் அகாலி தாலின் நிலைப்பாடு என்ன?

வெள்ளி, 24 மார்ச் 2023 (23:35 IST)
1992 ஆம் ஆண்டில், அகாலி தளத்தின் முன்னணி உறுப்பினர்களால் இந்த பிரச்சினை முறையாக கையாளப்பட்டது. இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் அவர்கள் ஒரு குறிப்பாணையும் அளித்தனர்.
 
”சீக்கியர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும், பஞ்சாபின் காலனித்துவ நீக்கம் ஒரு முக்கியமான படியாகும். உலகின் அனைத்து சுதந்திர நாடுகளைப் போலவே, சீக்கியர்களுக்கு ஒரு தேசம் வேண்டும்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின்படி, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையும், காலனித்துவம் , அடிமைத்தனம் மற்றும் அரசியல்-விரோத தளங்களிலிருந்தும் அவர்களுக்கு சுதந்திரம் தேவை” என்பதே அந்த குறிப்பாணையின் கடைசி பத்தியாக இருந்தது.
 
இந்த குறிப்பாணையை சமர்ப்பிக்கும் போது, ​​சிம்ரன்ஜித் சிங் மான், பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவின் தலைவர் குர்சரண் சிங் தோஹ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
 
இதற்குப் பிறகு பிரகாஷ் சிங் பாதலும், குர்சரண் சிங் தோஹ்ராவும் இந்தக் குறிப்பாணையை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.அகாலி தளத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரகாஷ் சிங் பாதல் பேசும்போது, ”அகாலி தளம் சீக்கியர்களை மட்டுமின்றி பஞ்சாபின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும். எனினும், இதற்கான முறையான தீர்மானம் எதுவும் வரவில்லை” என்று கூறினார்.
 
சிம்ரன்ஜித் சிங் மானின் அகாலி தளம் (அமிர்தசரஸ்) 1994 ஆம் ஆண்டு அரசியல் இலக்குகளை மீட்டமைத்தது. அதே நேரத்தில் கேப்டன் அமரீந்தர் சிங்கும் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார். பிரகாஷ் சிங் பாதல் இதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சீக்கிய தற்காலிக விவகாரங்களின் மிக உயர்ந்த இடமான ஸ்ரீ அகல் தக்த் சாஹிப்பின் ஆதரவின் கீழ் மே 1, 1994 ஆம் ஆண்டு இது கையெழுத்திடப்பட்டது. இதனை அமிர்தசரஸ் பிரகடனம் என்று கூறினர்.
 
"ஹிந்துஸ்தான் (இந்தியா) என்பது வெவ்வேறு தேசிய கலாச்சாரங்களின் துணைக்கண்டம். ஒவ்வொன்றும் அதன் சொந்த பாரம்பரியம் மற்றும் முக்கிய நீரோட்டத்தைக் கொண்டுள்ளது என்று ஷ்ரோமணி அகாலி தளம் நம்புகிறது."
 
இந்த துணைக்கண்டமானது ஒரு கூட்டமைப்பு கட்டமைப்பின்படி மறுசீரமைக்கப்பட வேண்டும். இதனால் ஒவ்வொரு கலாச்சாரமும் மலர்கிறது. மேலும் இது உலகின் தோட்டத்தில் ஒரு தனித்துவமான நறுமணத்தை விட்டுச்செல்லும்.
 
இந்திய அரசாங்கத்தால் அத்தகைய அமைப்பு மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், காலிஸ்தானைக் கோரி போராடுவதைத் தவிர ஷிரோமணி அகாலி தளத்திற்கு வேறு வழியில்லை” என்று அமிர்தசரஸ் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த ஆவணத்தில் கேப்டன் அமரீந்தர் சிங், ஜக்தேவ் சிங் தல்வண்டி, சிம்ரன்ஜித் சிங் மான், கர்னல் ஜாஸ்மர் சிங் பாலா, பாய் மஞ்சித் சிங் மற்றும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
 
உலகளவில் எழுந்த காலிஸ்தான் கோரிக்கை:
 
இப்போது காலிஸ்தானுக்கான கோரிக்கையை அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் எழுப்பி வருகின்றனர். அந்தந்த நாடுகளில் இருக்கும் சீக்கிய அமைப்புகள் இதனை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பஞ்சாபில் இதற்கு அவ்வளவு ஆதரவு இல்லை.
 
`நீதிக்கான சீக்கியர்கள்` என்ற பெயரில் அமெரிக்காவை அடிதளமாக கொண்ட குழு ஒன்று இயங்கி வருகிறது. பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் இருப்பதாகக் கூறி, UAPA வின் கீழ் 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய அரசால் இந்த குழு தடை செய்யப்பட்டது.
 
இதற்கு ஓராண்டு கழித்து, அதாவது 2020ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் காலிஸ்தான் குழுக்களுடன் தொடர்புடைய 9 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது. மேலும் காலிஸ்தானை ஆதரித்து இயங்கி வந்த 40 வலைத்தளங்களை முடக்கியது.
 
சீக்கியர்களுக்கு ஒரு தன்னாட்சி நாட்டை உருவாக்குவதே இந்த குழுவின் நோக்கமாக இருந்தது. அதற்காக சீக்கிய சமூகத்தினரின் ஆதரவைப் பெற இந்த குழு முயற்சித்து வந்தது.
 
‘நீதிக்கான சீக்கியர்கள்` குழு 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. அதன் முன்னணி முகமாக இருந்தவர் குர்பத்வந்த் சிங் பண்ணு. இவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகரில் சட்டம் பயின்று, அமெரிக்காவில் சட்டப் பயிற்சியும் பெற்றவர்.
 
இவர் இந்த குழுவின் சட்ட ஆலோசகராகவும் இருந்தார். காலிஸ்தானுக்கு ஆதரவாக 'வாக்கெடுப்பு 2020' என்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். கனடாவின் சில பகுதிகளிலும், மற்ற பிற இடங்களிலும் இது போன்ற 'வாக்கெடுப்பு' நடத்தப்பட்டது. ஆனால் சர்வதேச அரசியலில் அது பெரிதாக எடுபடவில்லை.
 
அகல் தக்த்தின் ஜாதேதாரின் நிலை என்ன?
 
அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அகல் தக்த், சீக்கிய மத மற்றும் தற்காலிக விவகாரங்களில் முடிவெடுக்கும் மிக உயர்ந்த இடமாக அறியப்படுகிறது. அதன் தலைவர் ஜாதேதார் என்று அழைக்கப்படுகிறார். இவரோடு செயல்படும் மற்ற நான்கு தக்த்களின் தலைவர்களுடன் இணைந்து, சீக்கிய சமூகம் தொடர்பான முக்கியமான விஷயங்களில் இவர்கள் கூட்டாக முடிவுகளை எடுக்கிறார்கள்.
 
2020 ஆம் ஆண்டில், ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் நினைவு நாளையொட்டி, காலிஸ்தானின் கோரிக்கை நியாயமானதுதான் என்று அகல் தக்த் ஜதேதார், கியானி ஹர்ப்ரீத் சிங் கூறினார்.
 
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், ​​"சீக்கியர்கள் இந்த படுகொலையை (1984 ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்) நினைவில் கொள்கிறார்கள். காலிஸ்தானை விரும்பாத சீக்கியர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. இந்திய அரசாங்கம் காலிஸ்தானை கொடுத்தால், நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம்" என்று அவர் கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்