"எடப்பாடி முதல்வர் பதவிக்கு வந்தது அதிசயம்” - ரஜினிகாந்த்!

திங்கள், 18 நவம்பர் 2019 (15:20 IST)
நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.
தினமணி - `எதிர்காலத்தில் ஓர் அதிசயம் நடக்கும்` - ரஜினிகாந்த்
 
நடிகர் கமல்ஹாசனின் 60 வருடத் திரை வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக, `உங்கள் நான்` என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
 
அதில் நடிகர் ரஜின்காந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர் என்கிறது தினமணியின் செய்தி.
 
அப்போது பேசிய ரஜினி, "கமலுக்கும், எனக்குமான நட்பு உயிரோட்டமானது. அதை யாராலும் உடைக்க முடியாது. நாங்கள் இருவருமே எங்களின் வளர்ச்சிக்காக எங்கள் ரசிகர்களை பயன்படுத்திக் கொண்டதில்லை.
 
எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்.
 
மேடையில் நிறைய பேர் அரசியல் சார்ந்து பேசினார்கள். தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி, சில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
 
அவர் முதலமைச்சர் பதவிக்கு வந்ததும், இருபது நாள்களுக்குக் கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார் என்றும் சொன்னார்கள்.
 
அவர் அந்தப் பதவிக்கு வந்தது அதிசயம். நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும்"
 
என்று கூறியதாக விவரிக்கிறது அச்செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்