பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு

வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:11 IST)
பிரிட்டனில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு ஏற்பட்டிருப்பதாக பிபிசியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்த மாத தொடக்கத்தில் டஜன் கணக்கிலான மக்களுக்கு தவறுதலாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியும் படி அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இப்போது அப்படிப்பட்ட இரண்டாவது தரவு கசிவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.
 
சமீபத்தில் ஏற்பட்ட தரவுக் கசிவு தொடர்பான விவகாரத்தில், பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் அனுப்பிய மின்னஞ்சலில், சில மின்னஞ்சல்கள் மற்றும் 55 நபர்களின் பெயர்களை எல்லோரும் பார்க்கும் விதத்தில் இருந்தது.முதல் மின்னஞ்சல் தரவுக் கசிவில், பிரிட்டனில் குடியேற விரும்பும் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு (அவர்களில் பலர் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது) தவறுதலாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.
 
இது தொடர்பாக ஒரு முழு விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் ஒரு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறினார். முதல் தரவுக் கசிவுக்கு ஒரு தீர்வு காணப்படுவதற்குள் தற்போது இரண்டாவது மின்னஞ்சல் தரவுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்