தென்னாப்பிரிக்காவில் நீடிக்கும் வன்முறை; கடைகள் சூறை - 72 பேர் பலி

புதன், 14 ஜூலை 2021 (09:40 IST)
தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.

சொவேட்டோ நகரில் கடைகள் சூறையப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். டர்பன் நகரில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து குழந்தை ஒன்று தரைத் தளத்துக்கு தூக்கி வீசப்படும் காட்சியை பிபிசி படம்பிடித்திருக்கிறது.
 
நாட்டின் முக்கியப் பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டியதாக 12 பேரை அடையாளம்  கண்டிருப்பதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
 
இதுவரை 1,234 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 
1990-களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிக மோசமான வன்முறை இதுவென அதிபர் சிரில் ராமஃபோஸா கூறியுள்ளார்.
 
ஊழல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்