குஷி நகர விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்தார்

"குஷிநகர் சர்வதேச விமான நிலையம் உலகெங்கிலும் உள்ள செளத்த சமுதாயத்தின் பக்திக்கு அர்ப்பணம். இந்த இணைப்பின் மூலம் புத்தர் தொடர்புடைய இடங்களின் மேம்பாடு மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது," என்று விமான நிலைய திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோதி தெரிவித்தார்.
 
இந்திய விமான சேவை திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 900க்கும் மேற்பட்ட புதிய பாதைகளில் விமான சேவை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இதில் 350 வழித்தடங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. 50க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அல்லது முன்பு சேவையில் இல்லாதவை செயல்படத் தொடங்கியுள்ளன.
 
உத்தர பிரதேசத்தில், குஷிநகர் விமான நிலையத்திற்கு முன்பு 8 விமான நிலையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.
 
லக்னெள, வாரணாசி மற்றும் குஷிநகருக்குப் பிறகு ஜெவார் சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அது தவிர, அயோத்தி, அலிகார், அசம்கர், சித்ரகூட், மொரதாபாத் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய இடங்களில் விமான நிலையத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றுள்ளன.
 
குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெளத்த பிக்குகள் மற்றும் இலங்கை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஆகியோருடன் வந்த இலங்கை விமானம் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்