கடல் மர்மம்: விலாங்கு மீனின் புலப்பெயர்வு ரகசியம் நீங்கியது - வியப்பூட்டும் தகவல்கள்

திங்கள், 17 அக்டோபர் 2022 (22:26 IST)
ஐரோப்பிய விலங்கு மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ள இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது
 
இயற்கையின் மிகவும் அதிசயமான ஒரு பயணத்திற்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளை விஞ்ஞானிகள் அவிழ்ந்து உள்ளனர்.

 
ஒவ்வோர் ஆண்டும், விலாங்கு மீன்கள் ஐரோப்பிய நதிகளில் இருந்து வட அட்லான்டிக் பகுதியில் உள்ள சர்காசோ கடலுக்கு ஒரே ஒரு முறை இனப்பெருக்கம் செய்ய பயணம் செய்யும். பிறகு அவை இறந்து போகும். இவை இறுதியாக சென்றடையும் இடம் குறித்து சில சந்தேகங்கள் இருந்தாலும், இதுவரை நேரடி ஆதாரம் எதுவும் இல்லை.

 
விலாங்கு மீனுடன் செயற்கைகோள் உதவியுடன் தடமறியும் டேக்குகளை பொருத்தியதன் மூலம், அவை செல்லும் பாதையில் இறுதி இலக்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 
மேலும், இந்த தகவல் அழிந்து வரும் இந்த இனத்தைப் பாதுகாக்க உதவலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

 
"சர்காசோ கடல் வரை விலாங்கு மீன்களை கண்காணிப்பது இதுவே முதல் முறை. மேலும் வளர்ந்த ஐரோப்பிய விலாங்கு மீன் அவற்றின் முட்டையிடும் பகுதியை அடைந்ததற்கான முதல் நேரடி ஆதாரம் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய சுற்றுச்சூழல் அமைப்பின் ரோஸ் ரைட் கூறினார்.

 
"இவற்றின் பயணம் இதுவரை அறியப்படாத விலாங்கு மீன் புலப்பெயர்வு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும்" என்கிறார் அவர்.
 
 
ஐரோப்பிய விலாங்கு மீன் அதன் வாழ்க்கை முழுவதும் பல ஆபத்துக்களை எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றம், மாசுபாடு, வேட்டையாடப்படுவது, அணைகள், சிற்றணைகள் போன்ற நீர் பாதைகளில் உள்ள தடைகள் ஆகியவற்றை இந்த மீன் இனம் எதிர்கொள்கிறது.

 
20 ஆண்டுகளாக எஸ்ஸெக்ஸில் உள்ள பிளாக்வாட்டர் நதியில் விலாங்கு மீன்களைக் கண்காணித்து வருகிறார் சுற்றுச்சூழல் அமைப்பின் விலாங்கு மீன் நிபுணரான டான் ஹெய்டர். கடந்த 20 ஆண்டுகளில் இந்த மீன் இனம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதை இவர் பார்த்திருக்கிறார்.

 
"ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் இங்கு விலாங்கு மீன்களை பிடிக்கிறோம். முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், அவை இப்போது மிகவும் குறைவாக உள்ளன. குறிப்பாக 1980களில் இருந்து 95% சரிவு ஏற்பட்டுள்ளது." என்கிறார் அவர்.
 
 
சிறிய, மென்மையான, கண்ணாடி போன்ற விலாங்கு மீன்கள் சர்காசோ கடலில் இருந்து இரண்டு அல்லது மூன்ற ஆண்டுகள் வரை அட்லான்டிக் முழுவதும் நகர்ந்து, ஐரோப்பிய கடற்கரையை சுற்றி வருகின்றன.

 
அவை நன்னீர் உள்ள சூழலை ஏற்றுக்கொள்கின்றன. ஆறுகளில் முதிர்ச்சி அடைகின்றன. அவை நீந்தத் தயாராகி ஒரு முறை இனப்பெருக்கம் செய்து இறக்கும் வரை 1 மீ நீளம் வரை வளரும்.
 
 
இப்போது வரை, கடல் முழுவதும் அவற்றின் புலப்பெயர்வு பற்றி ஆய்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது. முந்தைய ஆய்வுகள் அசோர்ஸ் வரை வளர்ந்த விலாங்கு மீன்கள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் அதனைத் தொடர்ந்து பின் தொடர் முடியவில்லை.

 
ஆராய்ச்சியாளர்கள் இப்போது அசோர்ஸில் வளர்ந்த விலாங்குமீன்களை கண்டுள்ளனர். அவை சர்காசோ கடல் வரை நீந்த முடியும் என்பதைக் காட்டுகிறது."

 
"அவை அசோர்ஸ் வரை செல்ல முடியும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அவை சென்றடையும் இடம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது," என்று ரோஸ் ரைட் கூறினார்.

 
"அசோர்ஸில் விலாங்கு மீன்களை பின்தொடர முடிந்தால், அந்த இடைவெளியை நிரப்பலாம் என்று நாங்கள் நினைத்தோம். இதை எங்களால் செய்ய முடிந்தது. இந்த பயணத்தின் இறுதி இடம் சர்காஸோ கடல் என்பதை எங்களால் இனி உறுதிப்படுத்த முடியும்."

 
இந்த வழிகளை கண்டறிந்து, விலாங்கு மீன்கள் எங்கு உருவாகின்றன என்பதைக் கண்டறிவது, அவற்றின் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்து கொள்வதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும் முக்கியமானதாகும்.

 
மர்மமான வாழ்க்கை

 
விலாங்கு மீன்களின் வாழ்க்கை சுழற்சி நீண்ட காலமாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூட விலாங்கு மீன்கள் எங்கிருந்து வந்தன என்ற கேள்வியை யோசித்து, அவை சேற்றில் இருந்து தன்னிச்சையாக தோன்றின என்று முடிவு செய்தார்.

 
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு, பஹாமாஸுக்கு அருகிலுள்ள மேற்கு அட்லான்டிக்கில் உள்ள சர்காசோ கடல் அவைகளின் இலக்கு என்று கருதப்பட்டது. ஆனால் இதுவரை இறுதி ஆதாரம் இல்லாமல் இருந்தது. இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்