இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை: உயிரிழந்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது என்ன?

வெள்ளி, 22 ஜனவரி 2021 (01:11 IST)
இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு மீனவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் எடுத்து வரவும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
என்ன நடந்தது?
 
கடந்த 18ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் (இலங்கை அகதி) ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
 
மீனவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடிப் படகைச் சிறைபிடித்து, இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலுக்கு அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.
 
நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் அந்த மீன்பிடிப் படகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை ரோந்து கப்பலின் மீது மோதியதில் கப்பல் சேதம் அடைந்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன் மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத்தாக்கி மூழ்கடித்தனர் என்றும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.
 
மக்கள்
 
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த 18ம் தேதி இந்திய மீனவப் படகுகள் உட்பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
படகிலிருந்த நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமானதால் புதன்கிழமை காலை கோட்டைபட்டிணத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் 15 மீனவர்கள் மாயமான மீனவர்களை தேடி சென்றனர்.
 
அப்போது நடுக்கடலில் மாயமான நான்கு மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடற்படை வசம் உள்ளதாகவும் விரைவில் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தமிழில் கூறி மீனவர்களை கரைக்கு திருப்பி அனுப்பினர் என்றும் மீனவர்களை தேடிச் சென்ற ப்ரைட்வின் என்ற மீனவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
மேலும் அதே நாள் மாலை சுமார் 6 மணியளவில் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மாயமான இரண்டு மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கபட்டுள்ளதாக யாழ்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை போலீசாருக்கு இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்து பின் உடல்கூறு ஆய்வுக்காக யாழ்பாணம் அரசு பொது மருத்துவமனையில் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
 
பின்னர் உடல்களை இந்தியர்கள் என உறுதி செய்ய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகள் இரு உடல்களின் புகைப்படங்களை ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மூலமாக மீனவர்களின் உறவினர்களிடம் அடையாளம் காணப்பட்டதில் நடுக்கடலில் மாயமான செந்தில் குமார் மற்றும் சாம்சன் டார்வின் என்பது தெரியவந்தது.
 
மேலும் இரண்டு மீனவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 11 மணியளவில் காங்கேசன்துறை கடற்பரப்பில் இரண்டு உடல்கள் மீட்கபட்டதாக இலங்கை கடற்படையினர் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் யாழ்பாணம் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இரண்டு உடல்களும் பெறப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக யாழ்பாணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கபட்டடுள்ளன.
 
இரண்டு உடல்களின் புகைப்படத்தை கொண்டு மாயமான மீனவர்கள் நாகராஜன் மற்றும் மெசியா என்பது உறுதி செய்யபட்டுள்ளது.
 
 
இதனிடையே புதன்கிழமை மீட்கப்பட்ட சாம்சன் டார்வின் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது யாழ்பாணத்தில் இருந்து அகதியாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதி.
 
இவர் முகாமில் உள்ள மன்னார் பேச்சாலையை சேர்ந்த இலங்கை அகதி விஜய லெட்சுமியை திருமணம் செய்து மண்டபம் முகாமில் வசித்து வருகிறார்.
 
சாம்சன் டார்வினுக்கு குழந்தை பிறந்து 20 நாட்களே ஆகிறது. இவர் இலங்கையர் என்பதால் இவரது உடலை உடல் கூறு ஆய்வு செய்து தமிழகம் கொண்டு வர முடியாது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 
இதனால் சாம்சனின் மனைவி விஜய லெட்சுமி தனது கனவரின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும் அவருடயை முகத்தை தன் குழந்தைக்கு காட்ட வேண்டும் என யாழ்பாணத்தில் உள்ள துணை தூதுவருக்கு கடிதம் ஒன்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
 
திங்கள்கிழமை இரவு என்ன நடந்தது?
 
திங்கள்கிழமை இரவு என்ன நடந்தது என்பதை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் அருள் பிபிசி தமிழிடம் கூறுகையில், "நாங்கள் 18ஆம் தேதி காலை மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று கோட்டைபட்டிணத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றோம்.
 
மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை இது இலங்கை கடற்பரப்பு இங்கு தமிழக படகுகள் மீன் பிடிக்க கூடாது மீறி மீன் பிடித்தால் கைது செய்யப்படும் என ஒலிப் பெருக்கி மூலம் எச்சரித்தனர்.
 
இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தோம். அப்போது ஜேசு என்பவரது படகை இலங்கை கடற்படை கைது செய்தது."

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்