கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (11:04 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையில் நடுவே இருந்த தடுப்பில் மோதி தீப்பிடித்து விபத்துக்கு உள்ளானது. காயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
டெல்லியில் இருந்து உத்ராகாண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஹரித்வார் மாவட்டத்தில்  மங்களூர் மற்றும் நர்சன் இடையே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் தெரிவித்துள்ளது. 
 
முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மங்களூர் PS பகுதியின் NH-58 இல் விபத்து நடந்தது என எஸ்பி தேஹத் ஸ்வபன் கிஷோர் கூறியுள்ளார். 
 
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யவும், தேவைப்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஏ.என்.ஐ. ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 
ரிஷப் பந்திற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவரது நிலை மோசமாக இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் என்றும், விபத்து நடக்கும்போது காரில் அவர் மட்டுமே இருந்துள்ளார்; காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து அவர் வெளியேறியுள்ளார் என்றும் என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.  ரிஷப் பந்த் தலையின் முன்பகுதி மற்றும் காலில் காயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது. 
 
25 வயதாகும் ரிஷப் பந்த், இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இலங்கை அணி 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.  இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. 
 
இதனிடையே, விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர்கள்  சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் மேட்ஸ்பேன் விவிஎஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்துக்காக பிரார்த்தனை செய்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.
 
அவர் விரைந்து குணமடைய வாழ்த்துகள். விரைந்து நலம் பெறுங்கள் சாம்பியன்` என்று பதிவிட்டுள்ளார்.  இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர விரேந்தர் சேவாக்  தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்து விரைந்து நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 
 
ரிஷப் பந்த் குறித்து நான் கேள்விப்பட்ட செய்திகள் சரியானதுதானா? அவர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான முனாஃப் பட்டேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான சாம் பில்லிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,  `ரிஷப் நலமாக இருக்கிறார் என நம்புகிறேன்` என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்