கொரோனா வைரஸ்: ஊரடங்குக்கு பிறகான உங்களின் பயணம் எவ்வாறு இருக்கும் தெரியுமா?

திங்கள், 4 மே 2020 (15:20 IST)
கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட கண்ணாடி திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுக்காப்பாக உணர செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

சர்வதேச அளவிலான பயணம் குறித்து நாம் விரைவாக திட்டமிடுகிறோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் உண்மைதான். அர்ஜென்டினா தனது விமான போக்குவரத்தை செப்டம்பர் மாதம் வரை இயக்கும் திட்டமில்லை என அறிவித்துள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முறை விடுமுறை நாள் பயணத்திற்கு தான் எந்த முன்பதிவும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இனி வெளிநாடு பயணம் மேற்கொண்டால், நாம் என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் ?

விமான நிலையங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் ?

அமெரிக்காவில் விமான நிலைய சோதனைக்கு உட்படுத்தப்படும் முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை விமான நிலையத்திலேயே கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுவும் 20 வினாடிகளுக்கு கை கழுவுவது அவசியம் என்றும் அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உலகில் உள்ள பல விமான நிலையங்களில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்திவுள்ளனர். விமான நிலையம் முழுவதும் ஹான்ட் சேனிட்டைசர்கள் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.

ஹாங் காங் சர்வதேச விமான நிலையத்தில் முழு உடலையும் கிருமிநாசினி சாதனத்தால் சுத்தம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதாவது உடலின் தோல் மற்றும் ஆடை மீது உள்ள கிருமிகளை குழுவதும் அகற்ற புதிய கருவிகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் ஒருவரின் ஆடை மற்றும் அவரின் தோல் மீது உள்ள கிருமியை ஒழிக்க 40 வினாடிகள் மட்டுமே ஆகும், அவ்வாறு இந்த நடைமுறையை பின்பற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் புற ஊதா ஒளியால் நுண்ணுயிரிகளை கண்டறிந்து அவற்றை அழிக்க தானியங்கி ரோபோக்களையும் பயன்படுத்தப்போவதாக ஹாங் காங் விமானநிலையம் அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பயணசீட்டு, இருக்கை எண் பெற எலக்ட்ரானிக் இயந்திரங்கள் உள்ள விமான நிலையங்கள் அந்த இயந்திரங்களையே நாள்தோறும் முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். தேவையற்ற தொடர்புகளை தவிர்க்க இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்த எலக்ட்ரானிக் இயந்திரங்கள் உதவும்.

உடல் வெப்பநிலையை கண்டறியும் தெர்மல் கருவிகளால் பயனில்லை

ஏற்கனவே விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட தெர்மல் கருவிகளால் பயனில்லை என இன்ட்ரீபிட் பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் தொர்ந்டோன் கூறுகிறார்.

அறிகுறிகள் இன்றி பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், சர்வதேச அளவில் வெளிநாடுகளில் இருந்து வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார் ஜேம்ஸ் தொர்ந்டோன்.

ஐக்கிய அரபு எமிரகத்தின் துபாய் விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கோவிட் 19 வைரஸுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகள் 10 நிமிடங்களில் வழங்கப்படுகிறது என்றும் துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

விமான பயணம்

வழக்கமாக நாம் விமானத்திற்குள் நுழையும் போது விமான பணிப்பெண்கள் நம்மை புன்னகையுடன் வரவேற்பார்கள். ஆனால் இனி முகக்கவசம் அணித்த படியே வரவேற்பு அமையும். அதேபோல நம்முடன் பயணிப்பவர்கள் அனைவரும் கூட முக கவசம் அணிந்த படியே காணப்படுவார்கள்.
மேலும் கொரியாவை சேர்ந்த விமானத்தில் நீங்கள் பயணம் மேற்கொள்வது இன்னும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். விமான பணிப்பெண்கள் முழு பாதுகாப்பு கவசத்தை அணிந்து, கண்களில் கண்ணாடி அணிந்து முக திரையிடவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நாட்டில் பிபிஇ என்று அழைக்கப்படும் முழு பாதுகாப்பு ஆடைகள் விமான நிலைய ஊழியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும் விமானத்தின் மூன்று இருக்கைகளில் இரண்டு பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள். நடுவில் உள்ள இருக்கையில் யாரும் அமர அனுமதியில்லை.

இதனால் குறைந்த எண்ணிக்கையிலான பயணசீட்டுகளே விற்கப்படும். விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

கடற்கரையிலும் கட்டுப்பாடா ?

இத்தாலியின் கடற்கரையில் சூரிய குளியல் மேற்கொள்ளும் அனுபவமும் இனி வேறுபடும். சூரிய குளியல் மேற்கொள்ள பயன்படுத்தபடும் நார்காலிகள் கண்ணாடி திரைகள் மூலம் பிரிக்கப்படும். இதற்கான வரைபடங்கள் கூட வட ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. விரைவில் ஐரோப்பிய நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும் இத்தாலியின் தங்கும் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் இப்போதைக்கு இயக்கப்படாது என ஐரோப்பிய சுற்றுலா நிறுவனத்தில் பணிபுரியும் உல்ஃப் சோன்டேக் கூறுகிறார். அதே போல உணவகங்களில் உள்ள நாற்காலிகளும் அதிக இடைவெளிவிட்டு பராமரிக்கப்படும்.

சமீபத்தில் சர்வதேச விமான போக்குவரத்து குழு நடத்திய ஆய்வில், ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்த்தப்பட்டவுடன் எப்போது விமான பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு 60 சதவீதத்தினர் இரண்டு மாதங்களுக்கு விமான பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய மாட்டோம் என தெரிவித்தனர், 40 சதவீதத்தினர் ஆறு மாதத்திற்கு விமான பயணம் மேற்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்