இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா: கேரளாவில் 6 பேருக்கு, கர்நாடகத்தில் 4 பேருக்கு உறுதி

செவ்வாய், 10 மார்ச் 2020 (16:37 IST)
சீனாவில் தொடங்கி, அந்த நாட்டை ஆட்டிப் படைத்து நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததாக இந்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவித்தன. இவர்களில் மூவர் ஏற்கெனவே குணமானவர்கள். எனவே நிகரமாக நோய்த் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 44.

இந்நிலையில், தற்போது கேரளாவில் புதிதாக 6 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 4 பேருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் உலக சுகாதார நிறுவனத் தரவுகளின்படி ஏற்கெனவே 50 கொரோனா நோயாளிகளைப் பெற்றிருந்த தாய்லாந்தைவிட மோசமான நிலைக்கு இந்தியா சென்றுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள நாடாகவும் இந்தியா ஆகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், செவ்வாய்க்கிழமை தாய்லாந்தில் புதிதாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை மாறலாம்.

கேரளாவில்...

கேரளாவில் மேலும் புதிதாக 6 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

7-ம் வகுப்புகள் வரையிலாான மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகளும், தேர்வுகளும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார் அவர். 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
விடுமுறைகால வகுப்புகள், தனிப்பயிற்சி வகுப்புகள், அங்கன்வாடி மையங்கள், மதராசாக்கள் ஆகியவையும் மார்ச் 31 வரை மூடப்பட்டிருக்கும்.

கர்நாடகத்தில்...

கர்நாடகத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது மேலும் 4 பேருக்கு புதிதாக நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவவேண்டும் என்றும் வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இரான் யாத்திரை சென்றிருந்த 58 இந்தியப் பயணிகள் விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லி கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மணிப்பூர்...

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை கருத்தில் கொண்டு மியான்மர் நாட்டுனான சர்வதேச எல்லை மூடப்படுவதாக இந்தியாவின் மணிப்பூர் மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்