புதைக்கப்பட்ட ராஜ்கிரண் உடல் தோண்டியெடுப்பு - மறுபிரேத பரிசோதனைக்கு நடவடிக்கை

வியாழன், 18 நவம்பர் 2021 (23:46 IST)
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலம், அவரது சொந்த ஊரான கோட்டைப்பட்டினத்தில் புகைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
 
அவரது மரணத்தில் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா சந்தேகம் எழுப்பி நீதிமன்றத்தில் முறையிட்டார். அதை விசாரித்த நீதிமன்றம் ராஜ்கிரணின் உடலை மறு உடல்கூராய்வுக்கு உட்படுத்தி அதன் முடிவை அவரது மனைவியிடம் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
 
இதன்படி ராஜ்கிரணின் உடலை மாவட்ட மருத்துவ அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில், சுகாதார ஊழியர்கள் தோண்டியெடுத்தனர். உடல்கூராய்வுக்கு அவரது உடல் உட்படுத்தப்பட்டுள்ளது.
 
முன்னதாக, கடந்த மாதம் மீன்பிடிக்கச் சென்றபோது வழிதவறி இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர்கள் இருந்த படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மோதியதாக கூறப்படுகிறது. இதில், சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மீனவர்கள் கடலில் குதித்தனர். அதில் ராஜ்கிரண் நீங்கலாக மற்ற இருவரும் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். ராஜ்கிரணின் உடல் இரு தினங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதைத் தொடர்ந்து இலங்கை துணைத்தூதரிடம் பிடிபட்ட சேவியர், சுகந்தன் ஒப்படைக்கப்பட்டனர். பிறகு நடுக்கடலில் வைத்து ராஜ்கிரணின் சடலம் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து ராஜ்கிரணின் சடலம் அவரது சொந்த ஊரான அறந்தாங்கியில் உள்ள கோட்டைப்பட்டினத்தின் கொடிக்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
 
இந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்