ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர் இப்போது முதல்வரா? - மு.க.ஸ்டாலின்

ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (18:05 IST)
ஜெயலலிதாவால் எந்த அரசியல் பதவியும் தரப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தவர் இப்போது முதல்வர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை குழு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சசிகலா முதலமைச்சராக தேர்வாகியது உறுதியாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதலளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழக மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆளுங்கட்சியாகவும் திமுகவை பலமான எதிர்க்கட்சியாகவும் தேர்ந்தெடுத்தனர். ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு மக்கள் அளித்த வாக்குகளும் மக்களின் நம்பிக்கையும் இன்று பொய்த்துப் போயிருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட போதும், அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவரது விருப்பத்தின்படி முதல்வர் பொறுப்பை ஏற்றவர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். ஜெயலலிதாவால் எந்த அரசியல் பதவியும் தரப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தவர் இப்போது முதல்வர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

திமுக நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜனநாயக வழியில் மக்களின் பேராதரவுடன் தமிழக அரசியல் களத்தை எதிர்கொள்ளும். மக்களின் எதிர்பார்ப்புகளை விரைந்து நிறைவேற்றும்" என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்