மே 25 வரை மழை பெய்ய வாய்ப்பு‌ள்ளது - மழைராஜ்

சனி, 21 மே 2011 (18:39 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் மே 25ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மழைராஜ் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

மே 14ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் மே 18 முதல் 22 வரை கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல் மே 18ஆம் தேதி கரூர், பழனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பலத்த மழை துவங்கியது. மேலும் கடந்த இரு தினங்களாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளிலும், கர்நாடகாவிலும் மழை பெய்து வருகிறது.

மே 21ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பனுக்கு தென்கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மே 25ஆம் தேதி வரை ராமேஸ்வரம், நாகப்பட்டிணம், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி, சென்னை உட்பட கடலோர மாவட்டங்களிலும், நீலகிரி, சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களிலும் பலத்த பழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பாம்பன், நாகை கடல் பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம் காணப்படும் என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்