நாடு முழுவதும் மழை நீடிப்பால் சாகுபடி பாதிப்பு

வெள்ளி, 31 டிசம்பர் 2010 (14:57 IST)
தென் மேற்குப் பருவ மழை திட்டமிட்ட காலத்திற்கும் கூடுதலாக பொழிந்ததால் வட நாட்டின் பல மாநிலங்களில் பயிர்கள் நீரில் முழ்கிய அழிந்ததால், எதிர்வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைவாசி மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் டிசம்பர் 18ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 14.44 விழுக்காடாக அதிகரித்துள்ள நிலையில், வெங்காயம், கரும்பு, தேங்காய் முதல் தேயிலை, பருப்பு வகைகள், நெல், மசாலா பொருட்கள் ஆகியவற்றின் விளைச்சல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பல மாநிலங்களில் மழை இன்னமும் தொடர்வதால் கோதுமை, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் சாகுபடி தள்ளிப்போடப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்கு முன்னரே பெய்த தொடங்கிய தென் மேற்குப் பருவ மழையால் உணவுப் பொருள் உற்பத்தி எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும் என்ற மதிப்பீடு தற்போது தொடரும் மழையாலும், வெள்ளத்தாலும் வினாக்குறியாகியாகியுள்ளது.

கோடையில் அறுவடையாகி சந்தைக்கு வரும் அரிசி, பருப்பு வகைகள், சோயா, நிலக்கடலை, சோளம், ரப்பர், காஃபி, தேயிலை, பருத்தி, கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள் என்று அனைத்து விளைச்சலும் மழையால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவந்த மழையாலும், தற்போது பொழியும் பனியாலும் பிரென்ச் பீன்ஸ், சுரைக்காய், கொடை மிளகாய், பட்டாணி ஆகியன பயிர் செய்யப்பட்ட 1.5 இலட்சம் ஏக்கர் நிலம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. மராட்டியத்தில் 12 இலட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட உணவு, தானியங்கள் நாசமாகியுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம், ஆண்டு சராசரியை விட மிக அதிகமாக மழை பெய்ததே. வட மாநிலங்களில் சராசரியை விட 359% மழை கூடுதலாக பொழிந்துள்ளது. மத்திய இந்தியாவில் 100 விழுக்காடு கூடுதலாக பொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் 20 விழுக்காடு கூடுதலாகவும், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் எடுத்துக்கொ்ண்டால் 40 விழுக்காடும் அதிக மழை பொழிந்துள்ளது.

மழை, வெள்ளம், பனி்ப் பொழிவு ஆகியவற்றால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பால், கடந்த 3 மாதங்களில் அரிசி (சாதாரண ரகம்) இலை ரூ.18இல் இருந்து ரூ.22 ஆக உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை கிலோவிற்கு ரூ.4ம், கடுகு எண்ணெய் விலை கிலோவிற்கு ரூ.8ம், தேயிலை விலை கிலோவிற்கு ரூ.15ம், வெங்காயம் விலை கிலோவிற்கு ரூ.50ம், ஆப்பிள் விலை கிலோவிற்கு ரூ.41ம் உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தினால் விவசாயிகளுக்கு எந்த ஆதாயமும் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்