தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்
வியாழன், 17 மே 2012 (20:52 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23 ம்தேதி முதல் தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நான் வெப்துனியாவில் தெரிவித்ததுபோல் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து அவ்வப்போது பலத்த மழையும், தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மேலும் சென்னையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கிறது. தற்போதைய சூழலில் தொடர்ந்து கோடை மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாகையை மையமாக கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் மே 22 வரை தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும் மே 25ம் தேதி முதல் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதால் தமிழகத்தில் பகலில் அதிக வெப்பம் காணப்பட்டாலும் மாலையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதியிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிலநடுக்க தேதி கணிப்பின்படி மே 19ம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும்.