தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (20:21 IST)
வங்கக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏப்ரல் 22 முதல் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஏப்ரல் 13 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். ஏப்ரல் 13ஆம் தேதி கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீடித்தது.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பரவலாக துவங்கும் மழை படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 29ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 4 மாதங்களில் தமிழகத்தில் சரிவர மழை இல்லாத சூழலில் தற்போது தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை மற்றும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி உலகின் ஏதாவது ஒரு பகுதியில் ஏப்ரல் 23ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 3 நாட்கள் வித்தியாசத்திலும் நடைபெறும் என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்