தற்போதைய வானிலை கணிப்பின்படி ஜூலை 5ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
ஜூன் மாதம் 29ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடலூர் மற்றும் புதுச்சேரியை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் ஜூன் 30 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை, கன்னியாகுமரி உட்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உட்பட தமிழகத்தின் இதர பகுதியில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் ஆந்திர கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்வதுடன், இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஜூன் 30ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.