காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்பு - மழைராஜ்
புதன், 5 ஜனவரி 2011 (19:00 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
கடந்த ஜனவரி 3ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஜனவரி 5ஆம் தேதி வரை காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாயப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். கடந்த இரு தினங்களாக காவிரி டெல்டாவில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 5ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடையும் சூழ்நிலை உள்ளது.
இதனால் 7ஆம் தேதி இரவு வரை காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழையும், பெரம்பலூர், அரியலூர் உட்பட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஜனவரி 9ஆம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.