28ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (17:04 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் வரும் 28ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பு வருமாறு:

கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கும், புதுச்சேரிக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது.

இதனால் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மழை தேதி கணிப்பின்படி மார்ச் 2ஆம் தேதி மழை பெய்தால், மார்ச் 7ஆம் தேதி வரையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கண்ட தேதிகளில் பெரும்பாலான நாட்கள் மழை வாய்ப்புள்ளதால் ஒருசில இடங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்தும் காணப்படும்.

குறிப்பாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, காவிரி டெல்டா மாவட்டங்களில் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதி கணிப்பின்படி பிப்ரவரி 25ஆம் தேதியும், மார்ச் 5ஆம் தேதியும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்